இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அரச வைத்தியசாலையில், அடுத்தடுத்து பிறந்த இரண்டு குழந்தைகள் மாறிப் போய் குழப்பம் ஏற்பட்டதால், ஆண் குழந்தைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்களும், தாய்ப்பால் கூட கொடுக்காமல், பாசப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தின் மெஹபூப் நகரைச் சேர்ந்த ரஜிதா 22 என்ற பெண்ணுக்கு, ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது.
இரண்டாவது பிரசவத்துக்காக ஐதராபாத் அரக வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.
டாக்டர் மற்றும் தாதிகள், ரஜிதாவின் உறவினர்களை அழைத்து, அவர்களிடம் ஆண் குழந்தையை கொடுத்துள்ளனர். பின்னர் ரஜிதாவிடமும், அவர்கள் அந்த குழந்தையை காட்டியுள்ளனர். சிறிது நேரத்துக்கு பின்னர், அதே டாக்டரும், தாதிகளும், பதற்றத்துடன் ஓடிச் சென்றனர். ‘குழந்தை மாறி விட்டது.
உங்களுக்கு பிறந்தது பெண் குழந்தை தான். ஆண் குழந்தையை கொடுங்கள்’ என கூறியதுடன், தாங்கள் கொண்டு வந்திருந்த பெண் குழந்தையை ரஜிதாவிடம் கொடுத்துள்ளனர். அப்போது ரஜிதா அந்த குழந்தையை ஏற்க மறுத்துள்ளார்.
‘ரஜிதாவுக்கு குழந்தை பிறந்த அதேநேரத்தில், ரமாதேவி என்ற பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்ளது. ரமாதேவியின் உறவினர்களிடம் ஆண் குழந்தையை கொடுப்பதற்கு பதிலாக, தவறுதலாக, ரஜிதாவின் உறவினர்களிடம் ஆண் குழந்தையை கொடுத்துள்ளனர். ரஜிதாவுக்கு பிறந்தது பெண் குழந்தை தான்’ என, வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம் அளித்தது.
‘எனக்கு பிறந்தது ஆண் குழந்தை தான், டாக்டர்கள் அப்படித் தான் முதலில் கூறினர். இப்போது, பெண் குழந்தை பிறந்ததாக கூறுகின்றனர். ஆண் குழந்தையை கொடுக்க மாட்டேன்’ என, ரஜிதா கண்டிப்புடன் கூறிவியுள்ளார்.
இதனிடையே ரமா தேவி, ‘எந்த குழந்தை என்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது நான் பெற்ற குழந்தையாக இருக்க வேண்டும்’ என கூறி, ஆண் குழந்தைக்கு உரிமை கோரியுள்ளார்.
பெண் குழந்தையை வாங்க, இரண்டு பேருமே மறுத்துள்ளனர். எங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை தான். அதற்கு தான் தாய்ப்பால் கொடுப்போம்’ என, இருவருமே கூறியுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரு குழந்தைகளுக்கும், வைத்தியசாலையின் பராமரிப்பில் புட்டி பால் கொடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, ரஜிதாவின் உறவினர்களும் வைத்தியசாலை மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையிலேயே, இரு தம்பதியருக்கும், மரபணு பரிசோதனை நடத்த வைத்தியசாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பரி சோதனை முடிவுகள் வரும் வரை, இரண்டு குழந்தைகளையும் வைத்தியசாலை பராமரிப்பில் வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.