தான் இறந்துவிட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பட்டிமன்ற நடுவரும், தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..
கடந்த மாதம் 27ம் திகதியில் இருந்து என்னை பற்றி வட்ஸ் அப் மூலம் தவறான வதந்தியை பரப்புகிறார்கள். நான் விபத்தில் இறந்து விட்டதாக வட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிடுகிறார்கள். எனது நண்பர்கள், குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் தொலைபேசி மூலம் இதுபற்றி விசாரிக்கிறார்கள். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
அவினாசி தொகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நான் பேசிவிட்டு வந்த பின்னர்தான் என்னைப்பற்றி இதுபோல் வதந்தி பரப்புகிறார்கள். இவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.






