ஒரு ரூபாய் வேண்டும் : முதல்வர் அலுவலகத்தில் போராடிய நோயாளி!!

487

Up

உத்திரபிரதேச மாநிலத்தில் நோயாளி ஒருவர் என்னுடைய ஒரு ரூபாயை எனக்கு கொடுத்தே ஆக வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் போராடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரைச் சேர்ந்த சஞ்சய் மாளவியா என்பவர் தன் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அப்பகுதியில் இருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்று புற நோயாளிகள் பிரிவில் ஒரு ரூபாய் கொடுத்து பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அவசர பிரிவினை நாடியுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்படவே தான் செலுத்திய பதிவுக்கட்டணம் ஒரு ரூபாயை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு புறநோயாளி பிரிவு அதிகாரிகள் ஒரு ரூபாய் திருப்பி தர முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மிகுந்த மன வேதனையுடன் இருந்த மாளவியா அப்பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருந்த முதல்வர் அலுவலகத்திற்கு சென்று நடந்ததை கூறி எனக்கு எனது ஒரு ரூபாயை பெற்றுத் தருமாறு புகார் அளித்துள்ளார்.

இதன் பின்பு, புகாரினை ஏற்று கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் ஊழியர்களை, சஸ்பெண்ட் செய்யுமாறு, சுகாதார துறைக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது.

இது குறித்து மாளவியா கூறியதாவது, எனக்கு ஒரு ரூபாய் வாங்க வேண்டும் என்பது நோக்கமல்ல. அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார்.