
மராட்டிய மாநிலம் புனே மாநகராட்சி அலுவலகம் எதிரே நாகோட் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கட்டுமான அதிபர் ஒருவர் வர உள்ளதாக புனே குற்றப்பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொலிசார் அந்த அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த கட்டுமான அதிபர் அங்கேஷ் அகர்வால் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை பொலிசார் பறிமுதல் செய்தனர். அதில், மொத்தம் 1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் இருந்தது.
பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கிஷோர் போர்வால் என்பவர் கமிஷன் அடிப்படையில் தன்னிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறியதன்பேரில் அங்கு வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பொலிசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





