ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உடலை தோண்டி எடுக்க சொல்வேன் : உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி!!

806

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் உயிரிழந்ததில் பலருக்கு பலவித சந்தேகங்கள் உள்ளன. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தது முதல் எந்த வித போட்டோவோ, வீடியோ ஆதாரமுமோ வெளியாகவில்லை, இதனால் தான் எனக்கும் சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், நான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தால் அது வேறு மாதிரி இருக்கும். ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க சொல்லுவேன்.

ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் உள்ள நிலையில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?

ஏனெனில் ஜெயலலிதா சிகிச்சை விவரம் மத்திய அரசுக்கு முழுமையாக தெரியும். அப்படியிருந்தும் மத்திய அரசு வாயை திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 9ம் திகதிக்கு ஒத்தி வைத்தார். இது விடுமுறைக்கால பெஞ்ச் என்பதால் அன்று வேறு பெஞ்ச் வழக்கை விசாரிக்க உள்ளது.