கைபேசி வாங்கிய 30,000 ரூபாவை அடைக்க சிறுவனை இளை ஞர் ஒருவர் கடத்தி கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் ஆரணி அருணகிரி சத்திரத்தை சேர்ந்தவர் தாமோதரன். வங்கி அதிகாரி. இவரது மகன் யுவராஜ் (12). இவர் அதே பகுதியில் இருக்கும் நகராட்சி பாடசாலையில் தரம் 8 இல் படித்து வருகிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி டிசம்பர் 6ம் திகதி முதல் 8ம் திகதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் யுவராஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 8ம் திகதி விடுமுறை நாளில் வீதியில் விளையாடி கொண்டிருந்த யுவராஜ் மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆரணி நகரிலுள்ள அனைத்து கண்காணிப்பு கமராக்களின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி விவசாய கிணற்றில் யுவராஜ் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறுவனின் இடுப்பு பகுதியில் கயிற்றால் கல் கட்டப்பட்டிருந்தது. எனவே, சிறுவன் கொலை செய்யப்பட்டு கல்லால் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.
உடல் மற்றும் முகம், தலையில் இரத்த காயங்கள் இருந்துள்ளன. யுவராஜை கடத்திய பின்னர் கொலையாளி அடித்து, துன்புறுத்தி சித்திரவதை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இதனிடையே சி.சி.ரி.வி காட்சியில் சிறுவன் யுவராஜை, வங்கி அதிகாரி தாமோதரனின் தூரத்து உறவினரான ஆரணியை சேர்ந்த ஜெயக்குமார் ( 24) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றமை தெரியவந்தது.
ஜெயக்குமாரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்ததில், சிறுவன் யுவராஜை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று ஜெயக்குமார் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஜெயக்குமாரை பொலி ஸார் கைது செய்தனர்.
இது குறித்து ஜெயக்குமார் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, நான் ஒன்லைன் மூலம் செல்போன்களை விலைக்கு வாங்கி கூடுதல் விலை நிர்ணயித்து விற்பனை செய்து வந்தேன்.
செல்போன்கள் வாங்கியதில் எனக்கு 30,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.இந்த தொகையை நானே கடனாக தான் வாங்கி இருந்தேன். வீட்டில் கேட்டு பார்த்தேன் பணம் தரவில்லை.
அப்போது தான் எனது உறவினரான வங்கி அதிகாரி தாமோதரனின் ஞாபகம் எனக்கு வந்தது. அவரது மகனை கடத்தி மிரட்டினால் எனக்கு தேவையான 30000 பணம் கிடைக்கும் என திட்டமிட்டேன். அதன்படி சிறுவன் யுவராஜை ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் கடத்தினேன்.
என்னால் மிரட்டி பணம் பறிக்க முடியவில்லை. பின்னர் மாட்டிக் கொள்வோம் என பயந்து சிறுவனை கொன்று வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் வீசிவிட்டு தப்பினேன். விசாரணையை தொடக்கம் முதலே கண்காணித்தேன்.
முதலில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் நினைத்ததாக கேள்விப்பட்டேன். தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் நினைத்ததாக கேள்விப்பட்டேன்.
இதனால் நிம்மதியடைந்தேன். இந்த நிலையில் கமரா காட்சியை வைத்து பொலிஸார் என்னை பிடித்து விட்டார்கள் என கூறியுள்ளார்.






