வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி 12வது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டம்!!

504

 
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக இன்றும் (15.05.2017) தொடர்கின்றது.

வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

கஷ்டப் பிரதேசங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் சேவையாற்றிய தமது நியமனம் குறித்து இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென தெரிவிக்கும் சுகாதார தொண்டர்கள், இம்முறை தமக்கு உறுதியான தீர்மானம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதார தொண்டர்களின் போராட்டத்திற்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் தீர்வை பெற்று தருவதாகவும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.