வெள்ளை வேனில் பெண் ஒருவரை கடத்திச் சென்று விடுதிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆரச்சிகட்டு – போகஹவெடிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 28ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.
சிலாபம் நகருக்கு சென்று கொண்டிருந்த போது தன்னை பின் தொடர்ந்த நபர் வெள்ளை வேனில் பலாத்காரமாக கடத்தி பண்டாரவத்த பகுதி விடுதி ஒன்றில் வைத்து வல்லுறவு புரிந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.