வவுனியாவில் அன்புலன்ஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் அவதி!!

999

 
அன்புலன்ஸ் வண்டி சாரதிகள் இன்று (27.06.2017) வவுனியாவில் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் பணி பகிஸ்கரிப்பின் தொடர்ச்சியாக அகில இலங்கை மாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்தின் தலைவர் டி.ஜி.சரத்குமாரசிறி தலைமையில் வவுனியாவில் பணிப் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார திணைக்களக சாரதிகள் 11 பேருக்கு வேறு திணைக்களகங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும்.

சகல மாகாணங்களிலும் சுகாதார திணைக்களக சாரதிகள் அத் திணைக்களகங்களில் மாத்திரமே பணியாற்ற அனுமதிக்கப்படவேண்டும்.

சுகாதார மத்திய அமைச்சர் ராஜித சேனாரத்தினவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அமைவாக அமைச்சரின் உத்தரவை மாகாண சுகாதாரத் திணைக்களங்களில் நடைமுறைப்படுத்தக் கோரியும் நாடளாவிய ரீதியில் மாகாண சுகாதார திணைக்களக சாரதிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை வவுனியா மாவட்டம் 49, கிளிநொச்சி மாவட்டம் 32, யாழ்ப்பாண மாவட்டம் 63, முல்லைத்தீவு மாவட்டம் 39, மன்னார் மாவட்டம் 39 ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 222 சுகாதாரத் திணைக்களக சாரதிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பணிப் பகிஸ்கரிப்பு நாட்களில் அவசர சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.