வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா : தென்னிந்திய பிரபலங்கள் வவுனியா வருகை!!

780

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று (01.07.2017) சனிக்கிழமை நடைபெறுகின்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையவுள்ளன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

இன்று இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பன இடம்பெறும்.

அத்தோடு சிறப்பு நிகழ்வாக, தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரசுதன் ( ஊதா கலர் ரிப்பன் பாடல் புகழ்), மற்றும் ஸ்வாகதா சுந்தர், கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், இவர்களுடன் இலங்கையின் முன்னணிக் கலைஞர்களுடன் இலங்கையில் முதல்தர இசைக்குழுக்களில் ஒன்றான ஸ்ருதிலயா இசைக்குழுவின் இசையில் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் HD தொழில்நுட்பத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான FULL HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.