வடமாகாண கல்வி அமைச்சருடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இலங்கை ஆசிரியர் சங்கமும் கூட்டாக சந்திப்பு!!

503

 
வவுனியா மாவட்ட கல்விச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் ஊழல் செயற்பாடுகள், முறையற்ற நியமனங்கள் பற்றி வட மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (03.07.2017) திங்கட்கிழமை பி.ப 2.30 மணியளவில் அமைச்சர் க.சர்வேஸ்வரனுடன் கலந்துரையாடபட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட அதிபர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுடன் அவர்கள் பாடசாலைகளில் முறையற்ற விதத்தில் கையாளப்பட்ட நிதிகளை மீள செலுத்த வேண்டும் என்பதையும் மற்றும் கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்பதையும் இலங்கை ஆசிரிய சங்க வவுனியா மாவட்டத் தலைவர் திரு.நேசராசா முன்வைத்தார்.

அத்தகைய கோரிக்கைகளுக்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் ஆதரவு தெரிவிப்பதுடன் மாவட்டத்தில் பாடசாலைகளில் நடைபெறும் சிறுவர் துஸ்பிரயோக விடயங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் சு.டொன்பொஸ்கோ சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் சம்பந்தமாக கல்வி அமைச்சர் கூறும் போது, நிர்வாக சட்டங்களுக்கு அமைவாக முறையற்ற நியமனங்களை இடைநிறுத்துவதாகவும் தன்னால் இயன்றளவு கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக வடமாகாண முதலமைச்சருடன் இணைந்து நல்லதொரு பதிலை பெற்றுத் தருவதாகவும் இச்சந்திப்பின் போது வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இவருடன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார்.