வவுனியாவில் வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபாவை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (06.07)முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா வங்கியில் கடந்த 05.06.2017 அன்று புதிய வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு குறித்த நபர் இருபத்திரெண்டு இலட்சத்தி இருநூற்றி ஐம்பது ரூபாவினை வைப்பிலிட்டு புதிய கணக்கு ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து தனது வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் முகவர் ஒருவரிடம் தனது வங்கி புத்தகம் கடவுச்சீட்டு என்பனவற்றை பயண ஒழுங்குகள் மேற்கொள்வதற்காக ஒப்படைத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக குறித்த முகவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து சந்தேகம் ஏற்பட்டு நேற்று (05.07) வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது வங்கியின் கணக்கில் 20 இலட்சம் ரூபா நாரமல என்ற பகுதியிலுள்ள வங்கியிலிருந்து கடந்த 29ம் திகதி பணம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது வாடிக்கையாளருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து வவுனியா வங்கி முகாமையாளருடன் ஏனைய விபரங்கள் ஆலோசனைகள் பெறப்பட்டதையடுத்து இன்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கியில் கணக்கு இலக்கத்தில் வைப்பிடப்பட்ட பணத்தை வேறு ஒருவர் எவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ள முடியும்? வங்கிப் புத்தகத்தினை வைத்தே பணத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த முகவராலே பணம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






