வவுனியாவில் 66 நாட்களாக போராடும் நாங்கள் டெங்கு ஏற்படக்கூடிய இடங்களை அகற்றத் தயார்!!

738

 
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 தொடக்கம் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் (08.07.2017) 66 நாட்களாகத் தொடரும் நிலையிலேயே சுகாதாரத் தொண்டர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்..

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாகிய நாங்கள் 66 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களில் 820 சுகாதாரத் தொண்டர்களும் சுகாதாரப் பனிமனையியூடாக டெங்கு தொடர்பான விழிப்புணர்களை மக்களுக்கு ஏற்படுத்தி டெங்கு ஏற்படக்கூடிய இடங்களை அகற்றியிருந்தோம்.

அதன் காரணமாக வடக்கில் கடந்த காலத்தில் டெங்கின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாங்கள் பணியாற்றக் காத்திருக்கின்றோம். எங்கள் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் கவனம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

வடக்கில் யுத்தகாலத்திலும் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களே சேவைக்கால அடிப்படையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொண்டர்கள் வெயில் மழை பாராது ஊதியம் இல்லாமல் பணியாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? வடமாகாணசபையே லஞ்ச ஊழலை கைவிடு, தொண்டர்களுக்கு நியாயமான முறையில் நியமனத்தை தா! போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.