வவுனியாவில் இளைஞரின் தாக்குதலுக்கு உள்ளான வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – நேரியகுளம் பகுதியில் நேற்று இரவு வயோதிபர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது இளைஞன் தனது கையிலிருந்த தலைக்கவசத்தினால் வயோதிபரை தாக்கியதில் வயோதிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வயோதிபர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மாங்குளம் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த சிமைல் தாம்டீன் (64 வயது) எனும் வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
வயோதிபர் மீது 18 வயதான இளைஞரே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், தற்போது அவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






