லிபியப் பிரதமர் அலி ஸீடேன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிபியாவின் ட்ரிபோலின் நகரில் உள்ள பொரிந்தியா ஹோட்டலில் அந்நாட்டு பிரதமர் அலி ஸீடேன் தங்கியிருந்தார். ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த அவரை, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் கடத்தி சென்றார்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து லிபிய அரசுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், ஒரு அரேபிய தொலைக்காட்சி, 5 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் போல வந்து பிரதமரை கடத்தி செல்வது போன்ற படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் பிரதமர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர், லிபியாவில் தீவிரவாத இயக்கங்கள் பெருகி வருவதாகவும், அவற்றை ஒழிக்க அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும் கூறியிருந்தார்.
தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடியதால், லிபிய நாட்டு பிரதமர் அலி ஸீடேனை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிபிய தலைவர் கடாபியை கொன்று, அந்நாட்டின் சில பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்க இராணுவம் ட்ரிபோலி பகுதியில் தீவிரவாதிகள் சிலரை கைது செய்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியில் அந்நாட்டு பிரதமர் கடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





