தமிழரசுக் கட்சியின் போக்கு அழகல்ல – சித்தார்த்தன்!

653

poloteவட மாகாணசபை அமைச்சரவைப் பெயர்ப்பட்டியல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் வடமாகாண முதலமைச்சரும் இணைந்து வெளியிடப்பட்ட பட்டியலே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அந்த பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்கு வழங்கப்படுகின்ற அமைச்சர் பதவியை பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவருக்கு வழங்குமாறு தாங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குத் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு செய்யாமல் அவர்கள் தமது விருப்பத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு அதனை வழங்கியிருப்பதை தமது கட்சிக்கு வழங்கியதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெயர்ப்பட்டியல் குறித்து கருத்து வெளியிட்ட பிளாட் அமைப்பின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தேர்தல் நடந்து முடிந்ததும் நடைபெற்ற கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது கூட்டத்தில் நான்கு அமைச்சுக்களையும் சபையின் தலைவர் பதவியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்குக் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அது படிப்படியாகக் குறைவடைந்து, இரண்டு அமைச்சுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டு ஏனைய இரண்டையும் ஈபிஆர்எல்எவ், டெலோ கட்சிகளுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இது மாகாண சபையின் ஆரம்ப நடவடிக்கைக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கும் அமோகமாக வாக்களித்துள்ள நிலையில், மாகாண சபையின் முக்கிய பொறுப்புக்கள் கட்சிகளிடையே பகிர்ந்தளிப்பதன் ஊடாகத்தான் அவர்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முடியும் என்றும், பதவியைப் பெறுவது முக்கியமல்ல என்றும் தெரிவித்தார்.

டெலோ அமைப்பின் தலைமைப்பீடம் இந்த அமைச்சரவைப் பட்டியல் பற்றி கலந்தாலோசிப்பதற்காக அவசரமாகக் கூடி ஆராய்ந்த பின்பே கருத்து எதனையும் தெரிவிக்க முடியும் என்று அந்தக் சட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

இவ்விடயம் குறித்து பேச கட்சியின் தலைமைப்பீடம் கூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.