வவுனியா தாண்டிக்குளத்தில் தொடர்ச்சியாக ஒளிரும் புகையிரதக் கடவை சமிச்சை : மக்கள் விசனம்!!

657

 
வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒளிச் சமிக்ஞை கடந்த நான்கு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஒளி எழுப்பி இயங்கிக் கொண்டிருப்பதால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அச்சத்தில் பயணத்தை தொடருவதில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று காலையில் இருந்து குறித்த ஒளிச் சமிஞ்சை தன்னிச்சையாக ஒளி எழுப்பி சிவப்பு விளக்கு ஒளிர்ந்தபடி உள்ளது.

இதனால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைக்குச் செல்வோர், உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்து எனக் கருதி அவ்விடத்தில் காத்து நின்றதுடன் அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவ்விடத்திற்கு வந்து போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோருக்கும் தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நிலமையை பார்வையிட்டுள்ளதுடன், அப்பகுதியில் போக்குவரத்து பொலிசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தனர்.

தொடர்ந்தும் ஒளிச்சமிஞ்சை இயங்கு நிலையில் இருப்பதால் புகையிரதத் திணைக்களத்தின் வடக்குக்கான பிரதான கட்டுப்பாட்டு பிரிவான அனுராதபுரம் புகையிரத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்த அரச அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை இப்பகுதியிலேயே கடந்த வாரம் புகையிரத விபத்து ஏற்பட்டு இளைஞன் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதுடன், வடக்கில் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவை ஒளிச் சமிக்ஞைகள் இந்தியாவில் பாவனையில் இருந்து நீக்கப்பட்டவை என வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.