அமெரிக்க ராணுவத்தின் உயர் பதவியைப் பெற்ற முதல் சீக்கிய வீரர்!!

558

miltry

டெல்லியில் பிறந்த சீக்கியரான சிம்ரன்ப்ரீத் லம்பா கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.
2009 ஆம் ஆண்டு தொழிற்துறையில் பொறியியற்கல்வி முடித்தவுடன் அந்நாட்டு ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை லம்பா அளித்தார்.

சீக்கிய மத கோட்பாடுகளான அவரது தலைப் பாகை, நீண்ட தலைமுடி மற்றும் தாடி போன்றவை குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒன்பது மாதம் ஆலோசனை செய்து அதன்பின்னர் லம்பாவைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வருடமே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயின்ற இரண்டு சீக்கிய அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.

அதனைக் கண்ட லம்பாவிற்குத் தானும் சாதாரண படைவீரர் என்ற நிலையிலிருந்து உயர்பதவியை அடையமுடியும் என்ற எண்ணம் தோன்றியது. ஆயினும், மதம் குறித்த அவரது ஆழ்ந்த நம்பிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அதன்பின்னர் பிறமொழிப் புலமை பெற்ற அயல்நாட்டவர்கள் என்ற சிறப்புப் பிரிவின் கீழ் அவர் தற்போது கார்ப்போரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த லம்பா, மற்ற வீரர்களைப் போலவே தானும் ராணுவத்தின் அனைத்துக் கடமைகளையும் செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

கடந்த 30 வருடங்களில் அமெரிக்க ராணுவத்தில் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியர் என்ற பெருமையையும் லம்பா பெறுகின்றார். 29 வயதான லம்பா தற்போது அந்நாட்டு ராணுவத்தின் ஐந்தாம் நிலை உயர்பதவியை வகிக்கின்றார். தனது முயற்சி கடினமான ஒன்றாக இருந்தபோதிலும் மற்ற சீக்கியர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்