அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் உள்ள பணியாளர்கள் குளியலறையில் நேற்று மாலை திடீரென பலமான வெடிசத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து சென்று சோதனையிட்டபோது பாட்டில் ஒன்று வெடித்திருந்ததைக் கண்டறிந்தனர்.
உலர் ஐஸ் நிரப்பப்பட்டிருந்த பாட்டிலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தினால் அந்த வெடிவிபத்து நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆயினும், பாதுகாப்புக் கருதி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் மூடப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் பலத்த சோதனைக்குள்ளாக்கப்பட்டது என்று புலனாய்வுத்துறை செய்தித் தொடர்பாளர் லாரா எமில்லர் தெரிவித்தார்.
வெடிவிபத்து நடந்த குளியலறை விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்ததால் அங்கு பொதுமக்களால் வரமுடியாது. எனவே, ஐஸ் நிரப்பப்பட்ட பாட்டில் அங்கு எப்படி வந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக லாரா கூறினார்.
இதனிடையில், பயணிகளின் உடமைகளுக்கு நடத்தப்படும் பாதுகாப்புத் திரையிடல் சோதனைனையும் விமான நிலைய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியதால் அந்த விமான நிலையத்திலிருந்து கிளம்பவேண்டிய நான்கு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன என்று விமான நிலைய பொலிஸ் சார்ஜென்ட் கர்லா ஒடிஸ் தெரிவித்தார்.





