வேலங்குளம் கிராம சேவகப்பிரிவுக்குட்பட்ட ஏழு கிராமங்களை கொண்டு செயற்படுகின்ற இவ் கிராமசேவகப்பிரிவு மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து 2010ம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றப்பட்டனர்.
சுமார் 350 குடும்பங்களுக்கு மேலதிகமாக காணப்படும் இக் கிராம சேவகப்பிரிவில் அபிவிருத்தி திட்டங்கள் எவையும் இடம்பெறுவதில்லை என கோரி இன்று (02.10.2017) காலை 8.30 மணியளவில் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை மறித்து பூவரசங்குளம் சந்தியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015.02.04 காலப்பகுதி வரையிலும் முழுமையான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாமையும் சீராக போக்குவரத்து , வீதி புரணமைப்பு மேற்கொள்ளாமையும் கண்டித்து 2016ம் ஆண்டு சுதந்திர தினத்தில் வேலங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் இரண்டரை வருடங்கள் கடந்த நிலையிலும் வீதி புனரமைப்போ, போக்குவரத்து சேவையோ இடம்பெறாதா நிலையில் இன்று (02.10.2017) வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தினை தடை செய்து வேலங்குளம் சந்தியிலிருந்து பூவரசங்குளம் சந்தி வரை வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் காரணமாக சுமார் 2 மணித்தியாலங்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் பொதுமக்களுடன் கலந்துரையாடி போக்குவரத்தினை சீர்செய்தனர்.
போராட்ட இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் , வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், இ.போ.சபை பணிப்பாளர் , வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் பொதுமக்களுடன் சுமார் 2 மணித்தியாலங்களாக கலந்துரையாடி இவ் வீதியினை 2019ம் ஆண்டு காபட் வீதிகளாக மாற்றி தருவதாவும் தற்போது கிரவல் போடப்பட்டு மக்கள் பயன்பட்டிற்கு ஏற்ப வகையில் வீதியினை செப்பனிட்டு தருவதாகவும் வாக்குறுதியளித்தமையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் போது பொதுமக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் , வடமாகாண சபை உறுப்பினர், வவுனியா பிரதேச சபை செயலாளர் அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.


























