வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் இன்று (09.10.2017) காலை 10.20 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தின் போது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பதில்கூறு, பங்கரவாத தடைச்சட்டத்தை உடனே ரத்து செய், அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா? சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்ட்டவர்களுக்கு நீதிவேண்டும், நீதீ அமைச்சரே பதிரல் கூறு, தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பிரஜைகளா? காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் என்ன? , மக்களின் நிலங்களிலிருந்து இராணுவமே வெளியேறு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வை, நாட்டில் நடப்பது நல்லாட்சியா? பேயாட்சியா? , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலைசெய், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வை, போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், முன்னாள் அரசியல் கைதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்திற்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





























