வவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இன்று (09.10.2017) காலை 7.30 மணியளவில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலையின் சூழலில் மிதிவெடி போன்ற ஒரு பொருள் இருப்பதனை அவதானித்த பாடசாலை அதிபர் உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பாடசாலைக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்திற்கிடமான பொருளை பார்வையிட்டதுடன் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான பொருளை சோதனையிட்ட சமயத்தில் அப்பொருள் மிதிவெடியென உறுதிப்படுத்தினார்கள்.
நாளையதினம் நீதிமன்றத்தின் உத்தரவுடன் மிதிவெடியினை செயலிழக்க வைக்கவுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.














