சவுதியில் உயிரிழந்த மகன் : அதிர்ச்சித் தகவலை கேட்ட பெற்றோருக்கு நேர்ந்த சோகம்!!

597

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சவுதியில் 46 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் இன்னும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படாத வருத்தத்தில் இளைஞரின் பெற்றோர் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பம்பும்கயம் கிராமத்தை சேர்ந்த ஜோஸ் செபஸ்டின் மற்றும் மோலி தம்பதிகளின் மகன் டின்ஸ் ஜோஸ் எட்டனியெய்ல்.

கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு சென்ற டின்ஸ் அங்கு கார் ஓட்டுனர் பணி செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி டின்ஸ் தங்கிருந்த அறையில் இருந்த ஏ.சி-யிருந்து வெளியேறிய நச்சு வாயு தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த தகவலை டின்ஸின் நண்பர் கேரளாவில் உள்ள குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார்.

டின்ஸ் உயிரிழந்து 46 நாட்கள் ஆகியும் அவரின் சடலம் சொந்த ஊருக்கு இன்னும் அனுப்பிவைக்கப்படவில்லை.

இதுகுறித்து அவரின் குடும்பத்தார் கூறுகையில், தடவியல் அறிக்கை வந்தால் தான் சடலத்தை அனுப்ப முடியும் எனவும், அது வர இன்னும் சில வாரங்கள் கூட ஆகலாம் எனவும் சவுதி அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

சவுதியில் உள்ள மலையாள அமைப்புகளும் டின்ஸ் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அதரவு அளித்து வருகின்றன.

ஏழ்மையான டின்ஸ்-ன் குடும்பம் அவரின் வருமானத்தை மட்டுமே அதிகம் நம்பியிருந்த நிலையில் அவரின் மரணம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மன அழுத்தம் காரணமாக ஜோஸ் மற்றும் மோலி நோய்வாய்ப்பட்டு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.