கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் சந்ததியினர் 19 பேர், தற்போது, ஒஸ்ரியா நாட்டில் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
கடந்த1991ல், இத்தாலி நாட்டின், டைரோல் மலைப் பகுதியில், பனியில் உறைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஆய்வில்,அது 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடல் என,தெரியவந்தது.
அதிலிருந்து அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் குறித்து, தொன்மையான தகவல்கள் கிடைக்கும் என்பதால், அதன் மீது ஏகப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வாளர்கள் அந்த மனிதருக்கு ´ஓட்சி பனிமனிதன்´ எனவும் பெயரிட்டனர்.
ஆய்வுகளின் ஒரு பகுதியாக, முழு மரபணு தகவலும் சேகரிக்கப்பட்டது. அந்த தகவல்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன. அதில் ஓட்சியின் மரபணுவில் ஒரு சடுதி மாற்றம் இருந்ததாக தெரியவந்தது.
இத்தகைய மாற்றங்கள்,சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தட்பவெப்பம் உள்ளிட்ட சூழல்களால், அங்கு வசிப்பவர்களிடம் உருவாகின்றன. அதனால், அவை பண்டைய மக்களின் இடப்பெயற்சிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பயன்படுகின்றன.
அதன் அடிப்படையில் ஒஸ்ரியா நாட்டின் டைரோல் பகுதியில், 3,700 பேரின் மரபணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 19 பேருக்கு ஓட்சியின் மரபணு சடுதி மாற்றம் இருந்ததாக தெரியவந்தது. ஆய்வாளர்களின் கணிப்பு படி, அவர்கள் ஓட்சியின் சந்ததியினர் அல்லது சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும்.





