இலங்கையில் தினமும் சுமார் 300 தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்வது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கலாச்சார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கலாச்சார திணைக்களத்தின் வழிக்காட்டலின் கீழ் காலி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற வாழும் கலை என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் திருமணமான கணவன், மனைவி குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது தினமும் சுமார் 300 தம்பதிகள் விவாகரத்துச் செய்துக்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை போன்ற சிறிய நாட்டில் இது மிகவும் அதிகம்.
பல விடயங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன. சம வயதுடையவர்கள் மற்றும் குறைந்த வயதில் திருமணங்களை செய்துக்கொள்வது இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
குறைந்த வயதில் திருமணம் செய்துக்கொள்வதால் அனுபவங்கள் குறைவு. இந்த வயதுகளில் திருமணம் செய்துக்கொள்வோர் அவசரமான முடிவுகளை எடுக்கின்றனர். முன்கோபம் கொள்கின்றனர். இதனால் அவசரமான முடிவுகளை எடுத்து பிரிந்து விடுகின்றனர் எனவும் அனுஷா கோகுல பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.






