மகளுக்காக நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் உழைக்கும் தந்தை!!

544

இலங்கையில் நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

மாவனல்ல, ஹெம்மாதகம பகுதியை சேர்ந்த குமாரசிங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கடும் உழைப்பில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தில் காணப்படும் நெருக்கடிளை தீர்க்கும் வகையில் இவ்வாறு நீண்ட நேரம் உழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டு பிள்ளைகளுக்கும் இரு வீடுகளை நிர்மாணித்து அவர்களின் எதிர்காலத்திற்காக, ஒரு தந்தையாக கடமையை நிறைவேற்றுவதே அவரது ஒரே நோக்கமாகும். அத்துடன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை குணப்படுத்துவதே அவரது மற்றைய நோக்கமாகும்.

46 வயதான குமாரசிங்கவை பாந்தர (அதிகாலை) என்றே அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர். தனது கடமையை அதிகாலையிலேயே ஆரம்பிக்கின்றமையினால் அவர் அந்த பெயரில் அழைக்கப்படுகின்றார்.

ஒப்பந்த அடிப்படையில் அவர் அனைத்து கூலி தொழிலையும் செய்து வருகின்றார். மணல் இழுத்தல், பல மாடி கட்டடங்களுக்கு கல் மற்றும் பொருட்களை கொண்டு செல்தல் உட்பட பல தொழில்களை அவர் செய்து வருகின்றார்.

எந்த வேலையாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் செய்வதனால் தனக்கு இலாபம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் வேலையை பொறுப்பெடுத்தால், அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்து 22 மணித்தியாலங்கள் தொடர்ந்து அவர் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.