வவுனியாவில் 12 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் பொலிஸாரால் கைது!!

240

வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் நேற்றிரவு (20.11.2017) 10.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தனிமையாக நின்ற ஒருவரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் சோதனையிட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்லவிருந்த 10 கிலோகிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளத்தை சேர்ந்த 30 வயது நபரை கைது செய்ததாகவும்,

இதேவேளை கொழும்பு செல்வதற்காக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நின்ற முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 30 வயது நபருடைய பயணபொதியினை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட சமயத்தில் 2 கிலோ கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு சந்தேக நபர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.