கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் : இரண்டாண்டு போராடி வென்ற பெண்ணின் துணிச்சல்!!

701

இளைஞர் காதலித்து ஏமாற்றியதாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய மலேசிய பெண் தற்போது காதலனையே கரம்பிடித்துள்ளார்.

மலேசியாவை சேர்ந்த விக்னேஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அங்குள்ள கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த புதுச்சேரியை சேர்ந்த அமர்நாத் என்பவருடன் விக்னேஸ்வரிக்கு காதல் ஏற்பட்டது.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி விக்னேஸ்வரியிடம் அமர்நாத் எல்லை மீறியுள்ளார். சில மாதங்களில் விக்னேஸ்வரி கர்ப்பமாகிவிட சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிய அமர்நாத், அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

பின்னர் காதலனை தேடி புதுச்சேரிக்கு வந்த விக்னேஸ்வரிக்கு அங்கு பெண் குழந்தை பிறந்தது. ஒருவழியாக அமர்நாத்தை அவர் சந்தித்த நிலையில், விக்னேஸ்வரியை மலேசியா செல்லும்படியும் அங்கு வந்த திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அவரை பின்னர் விக்னேஸ்வரியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த விக்னேஸ்வரி புதுச்சேரி வில்லியனூர்க்கு வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்காததால் புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்னால் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்.

போராட்டத்தையடுத்து வில்லியனூர் பொலிசார் அமர்நாத், விக்னேஸ்வரியை உடனடியாக திருமணம் செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று அங்குள்ள அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

காதலித்து ஏமாற்றினால் மூலையில் முடங்கிவிடும் பெண்களுக்கு மத்தியில், இரண்டாண்டு போராட்டத்திற்கு பிறகு காதலனையே விக்னேஸ்வரி கரம் பிடித்துள்ளார்.