வவுனியாவில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த நபரை கைது செய்யக் கோரி போராட்டம்!!

1350

 
வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த (14.11.2017) அன்று 16 வயதுச் சிறுமி வவுனியா நகரத்திற்கு சென்று வீடு திரும்பிய சமயத்தில் மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த ஐந்து இளைஞர்கள் குறித்த சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு தம்பிச் சென்றனர்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அன்று மாலை அவமானத்தை தாங்கிக்கொள்ளாத குறித்த சிறுமி அலரி விதையினை அரைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்டெடுத்த உறவினர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அதே பிரதேசத்தை சேர்ந்த நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கணேசபுரம் கிராமத்தில் இன்று ஒரு பிள்ளைக்கு நடந்த சம்பவம் எமது கிராமத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் பாதுகாப்பின்மையேன எனக் கருதி இந்த துஸ்பிரயோகத்திற்கான தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், சந்தேக நபர்களில் ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்யுமாறும் , கணேசபுரம் கிராமத்தில் சிரமதானம் ஒன்றினை மேற்கொண்டு கிராமத்தை சுத்தப்படுத்தி தருமாறும் கோரி கணேசபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் இன்று (23.11.2017) காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

கணேசபுரம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் போராட்டமானது மரக்காரம்பளை வீதியூடாக நெளுக்குளம் பொலிஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் வவுனியா பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குமாரசிங்க போராட்டத்தினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார் .

எனினும் போராட்டக்காரர்கள் அதிகாரியின் கருத்தை பொருட்படுத்தாமல் நெளுக்குளம் பொலிஸ் நிலையம் வரை சென்று நெளுக்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியினை சந்தித்து எஸ்.அத்தனாயக்கவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தாங்கிய மகஜரினை கையளித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,

துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு சந்தேகநபர் தப்பித்து சென்றுள்ள நிலையில் புலனாய்வாளர்கள், குற்றத்தடுப்பு பொலிஸாரின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்வதற்குறிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமத்தில் சிரமதானம் செய்யுமாறு வேண்டுகொள் விடுத்துள்ளீர்கள் அதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்வோம் எனவும் உங்கள் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் ஏதும் இடம்பெற்றால் உடனடியாக எமக்கு அறியத்தருமாறும் தெரிவித்தார். அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கணேசபுரம் கிராமத்தில் பல அமைப்புக்கள், கிராம சேவையாளர் என பலர் இருக்கின்ற போதும் கிராமத்தில் சிரமதானம் செய்வதற்கு பொலிஸாரை நாடுவது கவலைக்குறிய விடயமென சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.