யாழ்ப்பாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டளவில் 9 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவருக்கு ஒரு வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டளவில் குறித்த சிறுமியை 65 வயதான வயோதிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக வயோதிபர் தெரிவித்தமையை அடுத்து அவருக்கு ஒராண்டு கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
அதனை செலுத்த தவறும் பட்சத்தில் 1 மாத கால கடூழிய சிறையும், 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடும் செலுத்த வேண்டும்.
குறித்த நட்டஈட்டை செலுத்த தவறின் ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.






