வவுனியா மன்னார் வீதி 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள இரும்பக்கத்தில்(ஹாட்வெயார்) நேற்று (01.12.2017) மாலை 5.45 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதனையடுத்து பொதுமக்கள் உடனடியான வவுனியா நகரசபைக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் சரியான முறையில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லையெனவும் இவர்கள் சரிவர செயற்பட்டிருந்தால் ஒரு சில மணித்தியாலயங்களிலே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் எனவும் வவுனியா நகரசபையின் அசமந்தப் போக்கினால் மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னரே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
எமது நகரசபைக்கென ஒரு தீயணைப்பு வாகனமே தரப்பட்டுள்ளது. அதனை வைத்து நாங்கள் பாரிய சிரமத்திற்கு மத்தியில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம் .
மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் எமக்கு தேவையாகவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உள்ளுராட்சி அமைச்சுக்கு தெரியப்படுத்தி விரைவில் வவுனியா நகரபைக்கு மேலும் ஒரு தீயனைப்பு வாகனத்தினை கொள்வனவு செய்வதாகவும். இன்றைய தினம் எமது ஊழியர்கள் பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
சுமார் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் நேற்று இரவு 10 மணியளவில் மின்சாரமும் வழமைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.














