வந்தவாசியில், பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடனமாடிய மாணவி, மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி பாலுடையார் தெருவைச் சேர்ந்த ரங்கன், சித்ரா தம்பதியினரின் 10 வயது மகள் அபிநயா. இவர் வந்தவாசியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று வந்தவாசி ஒன்றிய அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில், தமிழக பள்ளிக் கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது.
அதில் குழு நடனத்தில், அபிநயா நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிநயா, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை ரங்கன் பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






