ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்தினால் விவசாயிகளுக்கு பசளைகளுக்கென அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா மானியம் பெறுவதற்காக பொதுமக்கள் பலநாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் இதேவேளை பொதுமக்கள் வரிசையில் நின்று பல மணிநேரம் காத்திருந்த பின்பு அவர்களை “இன்று போய் நாளை வா..” என்ற பாணியில் திருப்பி அனுப்புகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் வயது முதிந்தவர்களும் இங்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து திரும்ப செல்கிறார்கள். இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமாரை தொடர்பு கொண்ட போது,
குறித்த கமநல சேவைகள் நிலையத்தில் உள்ள அமைப்பினருக்கு குறித்த மானியத்தை பெறுவதற்கு இறுதி தினம் கடந்த 30.11.2017 உடன் முடிவடைந்து விட்டது. எனினும் 05.12.2017 தொடக்கம் 08.12.2017 வரை காலவரையறை நீடித்திருந்தும் இதுவரையில் படிவங்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை
இதேவேளை குறித்த நிலையத்தின் கீழ் உள்ள அமைப்புகளுக்கு பதிவு தபால் மூலமும் நேரடியாகவும் அறிவுறுத்தல் பதாதைகள் ஒட்டப்பட்டும் இதுவரையிலும் முழுமையாக படிவங்களை குறித்த அங்கத்தவர்கள் எமக்கு கிடைக்க தரவில்லை என குறிப்பிட்டதுடன்,
ஓமந்தை மற்றும் செட்டிகுளம் கமக்கார நிலையங்களினால் காணப்படும் இது போன்ற காலதாமதத்தினால் 15000 விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவதற்கு தம்மால் முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.