திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் : கொலை செய்யப்பட்டதாக புகார்!!

643

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், கணவரின் குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான விஜய் ஆனந்த் என்பவருக்கும், ரம்யா என்பவருக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 125 சவரன் நகை, கார் ஆகியவை விஜய் ஆனந்துக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் மக்கள் செய்தி தொடர்பாளர் பணியில் சேர 50 லட்சம் தேவை என்றும், அதை உன் வீட்டில் வாங்கி வா என்றும் ரம்யாவை விஜய் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தனது வீட்டில் பேசிய ரம்யாவிடம், சிறிது நாளில் பணம் தருவதாக அவரது பெற்றோர் கூறி உள்ளனர். ஆனாலும் கணவர் வீட்டில் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி பெற்றோரிடம் ரம்யா குமுறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரம்யாவின் பெற்றோரிடம், விஜய் ஆனந்த் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.இதை கேட்டு அதிச்சியடைந்த பெற்றோர், விஜய் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் தங்களது மகளை கொலை செய்து விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.