வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார் ) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்தினை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.
இந் நிதி நிறுவனத்தில் உறுப்பினர் ஆகுவதற்கு ரூபா 1000 செலுத்துமாறும், 10 லட்சம் ரூபா 1% வீத வட்டியடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் 1 லட்சம் ரூபா பணம் செலுத்த வேண்டுமெனவும் 5 லட்சம் ரூபா பணம் தேவைப்படின் 50000 பணம் செலுத்த வேண்டுமென நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி பணத்தினை மக்கள் வைப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் மக்களுக்கு குறித்த தனியார் நிதி நிறுவனத்தினால் காசோலை வழங்கப்பட்டது. அக் காசோலையினை வைப்பிட சென்ற சமயம் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் குறித்த தனியார் நிதி நிறுவனத்தினை முற்றுகையிட்டனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் பாதிக்கப்பட்ட மக்களுடனும் நிதி நிறுவன ஊழியர்களுடனும் கலந்துரையாடினர்.
பாதிக்கப்பட்ட மக்களிடம் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்ட பொலிஸார் நிதி நிறுவனத்தின் முகாமையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தனர்.
ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய தீர்வு கிடைக்கும் வரை நிதி நிறுவனத்தினை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்து நிதி நிறுவன அலுவலகத்தினுள் முற்றுகையிட்டு உள்ளனர்.