வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார்) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்தினை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.
இன் நிலையில் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதை அறிந்த மக்கள் பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி கண்டி வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று அங்கு அந்நிறுவன ஊழியர்களை சிறைப்பிடித்து வைத்திருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்த அனைவரும் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எட்டு மணிநேரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊழியர்களை விடுவித்ததுடன் அனைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளருடனும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்டு குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் முற்றுகை!!