இலங்கையில் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை!!

524

 
புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை நேற்று மாலை கண்டெடுத்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

56 வயதுடைய எம். புனேஸ்வரி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் புத்தளத்தில் அமைந்துள்ள நீர்ப்பாசன அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் புத்தளம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பெண்ணுடன் அவரது சகோதரியும் அவ்வீட்டில் வசித்து வந்துள்ளதோடு கொலை இடம்பெற்ற தினம் குறித்த சகோதரி வவுனியாவில் வசிக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வீட்டிற்கு வந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கொண்டுவந்ததாக கருதப்படும் சைக்கிள்கள் அவ்வீட்டுக்கு அருகிலுள்ள காட்டினுள் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுர குணவர்தன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.