ஆதிவாசியை அடித்துக் கொல்லும் முன் செல்பி எடுத்துக்கொண்ட கும்பல்!!

668

கேரளாவில் அட்டப்பாடி என்னுமிடத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆதிவாசி ஒருவரை அடித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவரைக் கொல்லும் முன் அந்த கும்பலில் ஒருவர் எடுத்த செல்ஃபி சமூக ஆர்வலர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

30 வயதுடைய மது என்னும் பெயருடைய அந்த ஆதிவாசி காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்தார். இரவு நேரங்களில் மளிகைக் கடைகளிலிருந்து அரிசி திருடுவது அவர் வழக்கம்.

புதன்கிழமையும் அவர் Kalkkanda என்னுமிடத்திலுள்ள ஒரு கடையிலிருந்து அரிசியைத் திருடியுள்ளார். இதனால் வியாழன் இரவு ஒரு கும்பல் காட்டுக்கு சென்று அவரை அடித்துத் துவைத்துள்ளது.

பின்னர் தாங்கள் ஒரு திருடனைப் பிடித்து வைத்திருப்பதாக பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளது அந்த கும்பல். பொலிசார் வந்து அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அவர் வாந்தி எடுத்துள்ளார்.

இதனால் பொலிசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பாரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மது என்னும் அந்த ஆதிவாசி தாக்கப்பட்டதை உறுதி செய்துள்ள பொலிசார், ஆனால் அவர் தாக்கப்பட்டதால் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்தான் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சற்றும் மனிதத் தன்மையற்று கொலை செய்யும் முன் அந்த ஆதிவாசியுடன் அவரது மரணத்திற்குக் காரணமான ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டது மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பலத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.