நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
உறவினர் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியலறை தொட்டியில் விழுந்து மரணமடைந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பகீர் கிளப்பும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் நடிகைகளுக்கும், கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமுக்கும் இடையே உள்ள தொடர்புகளை கணக்கில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீதேவி தீவிரமான மது வகைகளை அருந்துபவர் இல்லை, அப்படியிருக்கையில் அவரது உடலில் மது எப்படி வந்தது?
அந்த ஹொட்டலில் சிசிடிவி வசதி இல்லையா? அதுபற்றி ஒரு தகவலும் வெளியே வரவில்லையே? என்னைப் பொறுத்த வரையில் ஸ்ரீதேவி மரணத்தை கொலை என்றே கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், யாராவது உங்களை தள்ளி விடாமலோ அல்லது மூச்சு விடுவதை வலுக்கட்டாயமாக தடுக்காமலோ குளியலறை தொட்டியில் மூழ்கி இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.






