ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் : ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல் தகனம்!!

647

 
நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

உறவினரின் திருமண நிகழ்வுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் தமது கவலையையும், அனுதாபங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி ஹோட்டல் குளியலறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார் என அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நேற்றிரவு தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.

இவரது உடலுக்கு ரசிகர்கள், நடிகை நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முழுவதும் வெள்ளைநிற சம்பங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலம் அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம் கொண்ட வில்லே பார்லே பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

வெளியிலிருந்து யாரும் ஸ்ரீதேவியின் உடலை பார்க்க முடியாத அளவுக்கு வாகனத்தில் உடல் வைக்கப்பட்டது. ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் என அனைவரதும் கண்ணீர் கடலிலுக்கு மத்தியில் இன்றுடன் இப் பூவுலகிலிருந்து ஸ்ரீதேவி விடைபெற்றுச் சென்றார்.