சாகப் போகின்றேன் : தற்கொலைக்கு முன் தந்தைக்கு மகனின் உருக்கமான கடிதம்!!

672

தமிழ்நாட்டில் மாணவர் ஒருவர் கல்லூரி பிடிக்காத காரணத்தால், தனது தந்தைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். இவர், திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமத்தில், நேரு நினைவு கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாமரைச் செல்வன் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அறையில் கிடைத்த கடிதம் ஒன்றில், வாழ்க்கை என்ற தண்டவாளத்தை கடக்கத் தெரிந்தவன் வாழ்கிறான். கடக்கத் தெரியாதவன் என்னைப்போல் சாகிறான்.

எங்க அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்றுதான், கல்லூரி எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கட்டணம் குறைவாக உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன்.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே, என்னுடைய வணிகவியல்துறை எங்கு என்று கேட்டபோது, கல்லூரிக்கு வெளியேதான் அந்தத் துறையின் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார்கள். அதில் இருந்தே நான் வெறுத்துவிட்டேன்.

மேலும், இங்கு இருக்கும் சுற்றுப்புறச் சூழல் சரியாக இல்லை. என்னால் படிக்க முடியவில்லை என்று என்னுடைய அப்பாவிடம் எப்படிச் சொல்வது என தெரியவில்லை. இதற்கு மேலும் நான் இங்கு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

அதனால்தான், எங்க அப்பாவுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என இந்த முடிவை எடுக்கிறேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவரின் தற்கொலை குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தாமரையுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.