மும்பையில் சாதித்த தமிழன் : இவருடைய சொத்துமதிப்பு என்ன தெரியுமா?

532

 
இந்தியாவில் 10வது வரை மட்டுமே படித்த தமிழர் ஒருவர், தனது கடின உழைப்பால் 40 கோடி சொத்துக்கு அதிபதியாக உயர்ந்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிரேம் கணபதி. 10ஆம் வகுப்பு வரை படித்திருந்த இவர், தனது 17 வயதில் வேலைக்காக சென்னைக்கு சென்றார். அங்கு ரூ.250-க்கு மாத சம்பளத்தில் வேலை செய்து வந்தார்.

அந்த பணத்தைக் கொண்டு, 1990ஆம் ஆண்டு வேலை தேடி மும்பைக்கு சென்ற பிரேம், தனக்கு துணையாக வந்தவர் இவரது பணம், உடைமைகளை திருடிக் கொண்டு சென்றதால் மும்பை பாந்ரா ரயில் நிலையத்தில் தனியாக நின்றுள்ளார்.

இவரின் நிலையை பார்த்த தமிழர் ஒருவர், பிரேம் ஊருக்கு செல்ல தேவையான பணத்தை திரட்டி அளித்துள்ளார். ஆனால், தனது ஊருக்கு செல்ல மனமில்லாத பிரேம், பேக்கரி ஒன்றில் மாதம் ரூ.150 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.

அதன் பிறகு, சொந்தமாக இட்லி கடை ஒன்றை வைக்கும் அளவிற்குப் பணத்தைச் சம்பாதித்த பிரேம், வாஷி ரயில் நிலையத்தின் அருகில் கடை ஒன்றை தொடங்கினார். கூடுதல் வேலைக்காக தனது தம்பிகள் இருவரை ஊரிலிருந்து அழைத்து வந்து, அவர்களுக்கும் வேலை கொடுத்தார்.

தலைக்குத் தொப்பி, கைகளுக்கு உறை என தனது ரோட்டுக் கடையிலேயே சுத்தத்தினை பிரேம் கடைபிடித்ததால், அவரின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

அதன் மூலம், 5000 ரூபாய் வாடகையில் ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து, சிறிய உணவகம் ஒன்றை துவங்கினார். அதற்கு ‘Dosa Plaza’ என பெயர் வைத்த பிரேம், 27 வகையான தோசைகளை தயார் செய்து விற்க ஆரம்பித்தார்.

இவ்வாறாக, பிரேம் கணபதியின் உணவகம் மும்பையில் பிரபலமானது. ஷாப்பிங் மாலில் தனது கடையை திறக்க வேண்டும் என்று எண்ணிய பிரேம், தனது வாடிக்கையாளர் ஒருவரின் உதவியுடன் சில தடங்கலுக்கு பின்னர் மாலிலும் தனது Dosa Plaza-வை திறந்தார்.

இதனைத் தொடர்ந்து, இவரது கடைக்கு கிளைகள் துவங்க அனுமதி வேண்டும் என்று பலர் கோரியபோது, அதற்கு ஒரு நிபந்தனையுடன் அனுமதி அளித்தார் பிரேம்.

அதாவது, யார் உணவகம் ஆரம்பித்தாலும், அதற்கு தேவையான பொருட்களை தன்னிடம் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்று கூறினார்.

தற்போது, பிரேம் கணபதியின் Dosa Plaza நிறுவனத்தின் இணையதளத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 45 உணவகங்களும், வெளிநாடுகளில் 10 உணவகங்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.