இன்னும் 23 ஆண்டுகளில் இலங்கை சனத்தொகையில் ஏற்படப்போகும் மாற்றம்!!

925

இலங்கையின், தற்போதைய வயது நிலை தொடர்ந்தால், அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1981ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில், 6.6 வீதமாக இருந்தது. 2012ஆம் ஆண்டு, இது 12.4 வீதமாக அதிகரித்தது.

2016ஆம் ஆண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 15.5 வீதமாக உயர்ந்தது. இந்தநிலை தொடர்ந்தால், 2041ஆம் ஆண்டில், சனத்தொகையில் 24.8 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர்.

இதன் மூலம், நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வேலை செய்யும் வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள். இதனால் பல்வேறு நிதி சார்ந்த பிரச்சினைகள் தோன்றும்.

வருமான வரி மூலம் பெறப்படும் வருமானம் குறையும். சுகாதாரம், ஓய்வூதியம், முதியோர் பராமரிப்பு, போன்றவற்றுக்கான மீண்டெழும் செலவினங்கள் அதிகரிக்கும்” என அந்த அறிக்கை கூறுகிறது.