காணாமல்போன இரு மீனவர்கள் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்பு!!

320

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் இன்று மதியம் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை தலைமன்னார் மேற்கு கிராமத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இருவரும் கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

ஆனால் கடலுக்குச் சென்ற குறித்த இரு மீனவர்களும் குறித்த நேரத்திற்கு கரை திரும்பாத காரணத்தினால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் கடலில் தேடுதலை மேற்கொண்டனர்.

ஆனாலும் குறித்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சகோதரர்களான குறித்த இரு மீனவர்களும் 5 நாட்களின் பின் இன்று மதியம் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.