சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசின் தலைவரை மின்சார கதிரையில் அமரச் செய்தேயாகுவேன் என சூளுரைத்தார். மக்ரே இலங்கை வருவதற்கு அனுமதியளித்தமைக்கான பிரதான காரணம் ஊடகச் சுதந்திரமேயாகும் என ஊடகத்துறையமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
சனல்-4 தயாரிப்பாளர் கெலும் மக்ரேவுக்கு இலங்கை வருவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்ததன் மூலம் உலக நாடுகள் எங்களை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
சனல் 4 தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகள் எழுந்தன.
கெலும் மக்ரே பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை தொடர்பாக வேண்டுமென்றே அவதூறை ஏற்படுத்தி இலங்கையின் சுதந்திரத்தையும் அதன் அபிவிருத்தி நோக்கிய செயற்பாடுகளையும் மலினப்படுத்தினார்.
குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசின் தலைவரை மின்சார கதிரையில் அமரச் செய்தேயாகுவேன் என சூளுரைத்தார்.
இவ்வாறானதொரு நிலைமையில் அவர் எமது நாட்டுக்கு வருவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தமைக்காக உலகம் எம்மை சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறதென்றும் அமைச்சர் கூறினார்.
தகவல் ஊடகத்துறையமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்ரே இலங்கை வருவதற்கு அனுமதியளித்தமைக்கான பிரதான காரணம் ஊடகச் சுதந்திரமேயாகும். மூன்றாந் தரப்பொன்றின் ஆலோசனை மற்றும் அவர்கள் கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் கற்பனை கலந்துமே மக்ரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
அத்துடன் சனல்- 04 நிறுவனத்துக்கு இலங்கைக்குள் வர அனுமதியளித்து இலங்கையின் தற்போதைய நிலைமையை நேரடியாகக் கண்டு எமது நாட்டின் இறைமையை கருத்திற்கொண்டு அவர்களது மனசாட்சிக்கமைய நியாயத்தை நிலை நாட்டுவார்கள் என்ற எண்ணத்திலேயே அவருக்கு இலங்கைவர அனுமதியளித்தோம்.
மக்ரே தனது மனசாட்சிக்கு அமைய செயற்படுவாரேயானால் அவருக்கு இலங்கை தொடர்பிலான சரியான அபிப்பிராயம் கிடைக்குமென்று எண்ணுகிறேன். இல்லையெனில் அவருக்கு அனுமதியளித்ததனூடாக எதிர்நோக்கும் சவால்களுக்கு நாம் தைரியமாக முகம்கொடுப்போம்.
எமது நாட்டுக்கு வரும் பெரும்பான்மையான பாராளுமன்றக் குழுவினர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான வேலைத் திட்டங்களைக் கண்டு வியப்படைவார்கள். எமது ஜனாதிபதி நாட்டிற்காகவே செயற்பட்டு வருகின்றார்
புலிகள் இந்த நாட்டின் ஒரு முக்கியமானவர்கள் அல்ல. புலிகளை 32 நாடுகள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்திருந்தது. ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வந்த அரசுடன் புலிகளை ஒப்பிடுவது பாரிய குற்றச் செயலெனவும் அமைச்சர் தெரிவித்தார்.