யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட மக்கள் மீதும் கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மீதும் படைத்தரப்பினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
காணாமல் போனவர்களது உறவுகள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரிட்டிஸ் பிரதமரிடம் தமது கோரிக்கைகளை முன் வைக்கும் முகமாக குறித்த போராட்டம் இடம் பெற்றிருந்தது.
அந்த மக்களுக்கு ஆதரவாக கத்தோழிக்க அருட்தந்தையர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் மீதும் அருட்தந்தையர்கள் மீதும் பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைவாகவே கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மீதும், மக்கள் மீதும் பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இன்றைய சூழ்நிலையில் எமது மக்களுக்கு ஒரு பக்க பலமாக கத்தோழிக்க அருட்தந்தையர்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதை நாம் அறிகின்றோம்.
எனவே மதத்தலைவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்;குதல் சம்பவங்களை தடுக்க உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





