உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில், அனைவருக்கும் மாதந்தோறும் குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் புரட்சிகரமான திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த பிரச்னையை சமாளிக்க மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் படி ஒருவருக்கு 1.70 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியம் கிடைக்கும். சுவிஸ் நாட்டின் மக்கள் தொகை 8 கோடி. ஏழை, பணக்காரர், முதியவர், பெண்கள் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஆனால், இந்த உதவித்தொகையை பெறுவதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். குற்றப்பின்னணி ஏதும் இருக்கக்கூடாது. இந்த உதவி தொகையை 1.92 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், என, ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
குறைந்தபட்ச மாத வருமானம் கிடைத்தால் குழந்தைகளின் கல்வித்தரம் உயரும். நோயாளிகள் நல்ல மருத்துவ சிகிச்சையை பெற முடியும். அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், அந்நாட்டில் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியும் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை, பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் வரவேற்றுள்ளனர்.





