பாதணி வியாபாரம் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் வியாபாரியை கத்தியால் குத்தி, கழுத்தை நெறித்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மல்லவராச்சிகே ஜயதிஸ்ஸ மற்றும் பீ.எல்.பிரதீப்குமார ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நடந்துள்ளது.
கொழும்பு – வெலிகடை பகுதியை சேர்ந்த ராஜா ஆனந்த எதிரிசிங்க என்ற பாதணி வியாபாரியை கொலை செய்ததாக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, முறைப்பாட்டாளரின் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக கூறியுள்ளார்.





