யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடரியினால் தாக்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு கற்பகபிள்ளையார் கோவிலடி உடுவில் கிழக்கை சேர்ந்த செல்லத்துரை சண்முகநாதன் என்பவரது வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத் தாக்குதலில் செல்லத்துரை சண்முகநாதன்(50) அவரது மனைவியான நாகேஸ்வரி (45) இவர்களது மகனான ஜதுசன்(20) என்பவர்களே காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் சண்முகநாதன் தெரிவிக்கையில்..
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது நான் வீட்டு கதவை திறந்து வெளியில் வந்து பார்த்த போது என் தலையில் கோடரியினால் கொத்தினார்கள்.
என் அவல குரல் கேட்டு ஓடிவந்த மகன் மீதும் தலையில் கொத்தினர். அதனை தடுக்க முயன்ற எனது மனைவியையும் தாக்கினார். அதன் பின்னர் வீட்டுக்குள் புகுந்தவர்கள் வீட்டின் அனைத்து பொருட்களையும் கீழே தள்ளிவிழுத்தி தேடுதல் நடத்தினார்கள்.
அதற்கிடையில் சத்தம் கேட்டு அயலவர்கள் மின் விளக்குகளை ஒளிர விட்டதும் கொள்ளையர்கள் எம் வீட்டில் இருந்து தப்பி சென்றனர். அந்த கொள்ளை குழுவில் ஐவர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் முகத்திற்கு துணி கட்டி இருந்தனர். சிங்களத்திலும் கொச்சை தமிழில் உரையாடினார்கள் என தெரிவித்தார்.




