வீட்டில் பிரசவித்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணொருவரை நுவரெலியா டயகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டயகாமம் மூன்றாம் பிரிவு தோட்டத்தில் வசித்து வந்த தமிழ்ப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனது மனைவி பிரசவித்த குழந்தை இறந்து விட்டதாக கணவன் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணும் குழந்தையும் டயகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய நுவரெலியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குழந்தையின் கழுத்து நெறிக்கப்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





